சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் “சேவை செம்மல் விருது – 2025” வழங்கும் விழா ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடந்தது. கடலூர் மாவட்டத்திற்கான சேவை செம்மல் விருது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ப.ஆனந்த், கடந்த 5 ஆண்டுகளாக மனிதம் காப்போம் அறக்கட்டளையுடன் இணைந்து ரத்த தானம், கல்வி உதவி, ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல், மரக்கன்று மற்றும் பனைவிதை நடுதல், பள்ளி மாணவர்களுக்கு இரத்த தானம்,போதை ,சிறு வயதில் திருமணம் போன்ற விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வச் சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுவரை 21 முறை ரத்த தானம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைகளை மதிப்பிட்டு, அவருக்கு சேவை செம்மல் விருது – 2025 வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் பேசிய ராதாகிருஷ்ணன், “மக்கள் நலனுக்காக தன்னலம் இன்றி பணியாற்றும் உண்மையான நாயகர்களை கௌரவிப்பது பெருமை. மாவட்ட அளவில் ஒரு வருடம் முழுவதும் தன்னார்வலர்களின் சேவை கண்காணிக்கப்பட்டு மிகத் தகுதியானவர் தேர்வு செய்யப்படும் இந்த நடைமுறை பாராட்டத்தக்கது” என்றார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, “கல்வி என்பது மனிதர் மற்றும் சமுதாயத்தை மாற்றும் வலிமையான ஆயுதம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி செயல்படும் சேவையாளர்களை எங்கள் மேடையில் கௌரவிப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
விருது பெற்ற ப.ஆனந்த், 10 ஆண்டுகளாக சேவைப் பணியில் செயல்படுகிறேன். மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு குமார் அவர்களுடன் 4 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த விருது எனக்கு மேலும் பல சேவைகளுக்கான ஊக்கமாகும். பசி இல்லா கடலூரை உருவாக்கவும், ரத்த தானம் தேவையை பூர்த்தி செய்யவும், மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ந்து செயல்படுவேன்” என்றார்.
மேலும், தனது பயணத்தில் துணையாக இருக்கும் தோழர்கள், அமைப்புகள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.


