பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தலையிட்டு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிப்பு அடைவதை எடுத்துரைத்து பேசினர்,
ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் மாதா மணி தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் விளக்க உரையாற்றினார். மேலும், மாநகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஏ. முகமது ஜாபீர், எஸ். சக்திவேல், கார்த்திக், பிரபு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொடர் கண்டன உரையாற்றினர். மேலும் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், அம்மாபேட்டை, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தை முன்னிறுத்தி, வாகன ஓட்டியின் உரிமத்தை வைத்து தரையில் சூடம் ஏற்றி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. எரிபொருள் விலை உயர்வு, காரணமாக பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வர இந்த ஆர்ப்பாட்டம் நூதன முறையில் நடத்தப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் அ. மகேஷ்


