தேர்தல் வெற்றிக்கான பரிசாக சாமானிய மக்களின் தலையில் திமுக அரசு இறக்கிய பேரிடி..!
-எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டண உயர்வை ஜூலை 01 முதல் முன்தேதியிட்டு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பான மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பின்படி வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 13 முதல் 53 சதவீதம் வரை மின்கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் ஜூலை 01 முதல் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கும் தமிழக அரசின் இத்தகைய தொடர் மின்கட்டண உயர்வு நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
பாராளுமன்றத் தேர்தல்வரை காத்திருந்து, தேர்தல் முடிந்த பிறகு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பினை வெளியிட்ட திமுக அரசு, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடியும் வரை காத்திருந்து, அந்த தேர்தல் வெற்றிக்கான பரிசாக மக்களின் தலையில் மின் கட்டண உயர்வு எனும் பேரிடியை இறக்கி பரிசளித்துள்ளது.
ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள் சொத்துவரி உயர்வு மூலம் திமுக அரசு தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தந்தது. அதனைத் தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என தமிழக மக்களை வாட்டி வதைக்கும் கட்டண உயர்வுகளை தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டே வருகின்றது. இதன்மூலம் ‘சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்!’ என்று தமிழக முதல்வர் அடிக்கடி கூறுவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு போன்றவற்றால் அத்தியாவசியப் பொருட்கள் விலை விண்ணைத் தொடும் நிலையில், மின் கட்டண உயர்வும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
மக்கள் மூச்சு விடுதற்கு கூட இடமளிக்காமல் வரி உயர்வுகள், கட்டண உயர்வுகள் மூலம் மக்களை ஆளும் அரசுகள் தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், தொடர் மின்கட்டண உயர்வு ஏற்புடையதல்ல. ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மென்மேலும் மேலும் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். மேலும் அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தும்.
தொடர்ச்சியாக மக்களின் தலையில் கட்டண உயர்வை சுமத்தி பரிசளிப்பது திமுக அரசு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இப்படியான கட்டண உயர்வுகள் மூலம் மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதலை தமிழக அரசு தொடர்ந்தால், அதனைக் கண்டு மக்கள் நிச்சயம் வெகுண்டெழுவார்கள் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


