இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், அவர்களுக்கான மதிப்பூதியத்தை ரூ.50 ஆயிரமாக வழங்காமல் இருப்பதோடு, கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7300 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார்கள். தற்போது தான் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பூதியமே வழங்கப்படுகிறது. இந்த மதிப்பூதியமும் ஆண்டின் மே தவிர்த்த மற்ற 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019 ஜனவரி 28 அன்று ஆணையிட்டது. அந்த ஆணையை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 21 அன்று உத்தரவிட்டது. ஆனால், 4 மாதங்களான பின்னரும் அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மட்டுமின்றி, அவர்களுக்கான முந்தைய ஊதியத்தைக் கூட கடந்த 3 மாதங்களாக தமிழக அரசு வழங்கவில்லை. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 1996 ஆண்டு முதல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான முறையான ஊதியத்தை வழங்குவதில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், ரூ.20 ஆயிரத்தைக் கொண்டு ஒரு கவுரவ விரிவுரையாளர் வாழ்க்கையை கடத்துவது என்பது மிகக் கடினம்.


