அவதூறாக பேசியவர் கைது.!
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியனின் தலைவர் சிங்க தமிழச்சி மற்றும் தமிழக முதல்வரின் துணைவியாரை தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசிய கொளத்தூர் அருகே பெரவள்ளூரை சேர்ந்த சத்யராஜ் என்பவரை அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவு நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சங்கத்தின் தலைவர் ஜூபிடர் ரவி என்கின்ற ரவிச்சந்திரன் கடந்த 2024 ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். அதன் பிறகு சங்கத்தின் தலைவராக சிங்க தமிழச்சி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கத்தை வழி நடத்தி வந்தார்.
இந்நிலையில் காகிதப்பூ என்ற பத்திரிகை நடத்தி வரும் சத்யராஜ் என்பவர் சங்க நிர்வாகிகளை மிரட்டுவது, சமூக வலைதளங்களில் சங்கம் குறித்து தவறாக பதிவிடுவது, நக்கல் நையாண்டியாக பேசுவது, ஒருமையில் திட்டி கொலை மிரட்டல் விடுவதுமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சங்க நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தமிழ்நாடு செய்தித்துறை யூனியனின் தலைவர் சிங்க தமிழச்சியை பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியாரையும் தகாத அருவருப்பான வார்த்தைகளால் பேசியும் சிங்க தமிழச்சி அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாகவும் பதிவிட்டுள்ளார் . இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் சென்னை பெருநகர் காவல் ஆணையர் அவர்களிடம் சங்க நிர்வாகிகளோடு சிங்க தமிழச்சி புகார் கொடுத்துள்ளார்.
அப்புகாரை விசாரித்த அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவினர், தொடர்ந்து சத்யராஜ் சிங்கத்தமிழச்சி மீதும் முதல்வரின் மனைவியையும் மற்ற சங்க பெண் உறுப்பினர்களின் மீதும் அவதூறு பரப்பி வந்ததை உறுதி செய்ததால் நேற்று ஜனவரி 17 அன்று சத்யராஜ் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசியது, சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக பதிவிட்டது என நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சங்க பேரையும் சங்க நிர்வாகிகளையும் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பி வந்த சத்யராஜ் பயன்படுத்திய ஐந்து செல் நம்பர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை என பல மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது ஆன்லைன் புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


