சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவரின் வீட்டில் மாணவி டியூசன் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த வீட்டில் ஆசிரியை இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆசிரியையின் கணவர் ஆரோக்கியதாஸ் (வயது 45) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், தகாதஉறவில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து மாணவி உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்ததும் மாணவியும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் மாணவியிடம் விசாரித்தனர். இதில் ஆரோக்கியதாஸ் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற விவரத்தை மாணவி தெரிவித்தார்.
அதன்பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து
ஆரோக்கியதாசை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


