பர்கூர் அருகே நள்ளிரவு நேரத்தில் உதவி கோருவது போல கூச்சலிட்ட பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த பெண் கணவன் குடும்பத்தினரால் தக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பர்கூர் அருகே நள்ளிரவு நேரத்தில் உதவி கோருவது போல கூச்சலிட்ட இந்த பெண்ணை தான் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில், பல்லவன் வங்கி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 30 வயதுள்ள பெண் ஒருவர் நுழைந்தார். கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறி, “அண்ணா ஹெல்ப் பண்ணுங்க” என கூச்சலிட்டு, வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டு அழுதுள்ளார்.
அத்தோடு அங்கிருந்த பொருட்களை எடுத்து சத்தம் எழுப்பிய நிலையில், கொள்ளையர்களாக இருக்கலாம் என்று பயந்து கதவைத் திறக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
பின்னர் சில நிமிடங்களில் அந்த பெண் அங்கிருந்து விலகிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு ஆணுடன் பேசிய காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இக்காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருவதால், அந்த பெண் யார்? அவருடன் இருந்த ஆண் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
இதில் அந்த பெண் மிட்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி என்றும் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கணவரும் அவரது தாயும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்ததால், மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள்ளார். செல்லும் வழியில் தாகம் ஏற்பட்டதால் அந்த பெண், அங்குள்ள வீடுகளில் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனைவியை தாக்கியதாக பாக்கியராஜ் அவரது தாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

