தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது! நிவாரண உதவியை ரூ.15 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்!-எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடை மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் உதவித் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மழை வெள்ளதால் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் இந்த உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.
இந்த மழை வெள்ளத்தால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, தங்களின் சிறுசிறு சேமிப்பு மூலமாக வாங்கிவைத்த இரு சக்கர வாகனங்கள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களையும் இழந்து தவிக்கின்றனர். புயல்-கனமழை அறிவிப்புத் தொடங்கி தற்போது வரை 10 நாட்களுக்கும் மேலாக வேலையில்லாமலும், புயல் பாதிப்பாலும் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகி நிற்கின்றனர். படிப்படியாக தண்ணீர் வற்றினாலும் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை.
இந்த சூழலில் தமிழக அரசின் 6000 ரூபாய் நிவாரணத் தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. பெரும் இழப்புகளை சந்தித்துள்ள மக்களுக்கு இந்த 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாகும்.
ஆகவே, தமிழக அரசு நிவாரண உதவித் தொகையை ரூ.15 ஆயிரமாகவும், மழைநீரால் முழுவதும் பாதிக்கப்பட்ட தரைத்தள வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமாகவும் நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, ரேஷன் அட்டை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவித் தொகையை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் தவணைத் தொகையை செலுத்த மூன்று மாதகால அவகாசத்தையும் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதேப்போல் இந்த மழை வெள்ளத்தால் வியாபார நிறுவனங்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஆகவே, வியாபார நிறுவனங்களுக்கும், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் மானியத்துடன் கடன் உதவிகளையும் அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



