திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கையில் வீச்சரிவாளுடன் வந்து பெண்ணை கடத்திச் சென்றதாக திமுக பிரமுகரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கையில் வீச்சாரிவாளுடன் வீடு புகுந்து பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லும் இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி இரு தினங்கள் கழித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். யார் இவர் ? எதற்காக நடந்தது இந்த கடத்தல் சம்பவம் விரிவாக பார்க்கலாம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திருமண மண்டப உரிமையாளர் குட்டி என்கிற சபாபதியின் 2வது மனைவியின் மகனும் பைனான்ஸ் தொழில் செய்து வருபவருமான சதிஷ் தான் கையில் அரிவாளுடன் இந்த பகிரங்க கடத்தலை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
காரில் திமுக கொடி கட்டிக் கொண்டு திமுக பிரமுகராக வலம் வரும் தந்தை சபாபதி திருமண மண்டபம்,பட்டு மளிகை, பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என்ற பல தொழில்களை செய்து வருகின்றார். இதனால் சதீஷ் தந்தையின் பணத்தை வைத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
சதீஷுக்கும், அதே பகுதியில் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும் ஜான்சி என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சதீஷுக்கும், ஜான்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜான்சி, சதீஷை உதறிவிட்டு தனது தாயார் வீட்டில் வந்து விட்டார். ஆனால் சதிஷ் தொடர்ந்து ஜான்சியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஜான்சி மறுத்ததால் ஆத்திரமடைந்த சதிஷ், சம்பவத்தன்று இரவு சினிமா படங்களில் வருவது போல, தனது காரில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் உள்ளஜான்ஸியின் தாயார் வீட்டிற்கு கையில் வீச்சரிவாளுடன் சென்றுள்ளார்.
ஜான்சியை வீட்டிற்கு வெளியே தரதரவென்று இழுத்து கொண்டு தனது காரில் ஏற்றி கடத்த முயன்றதாக கூறப்படுகின்றது. இதனை தடுத்த ஜான்சியின் உறவினர்களை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ஆரணி முழுவதும் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஜான்ஸி தைரியமாக புகார் அளிக்க முன்வந்தார். இந்த சம்பவம் குறித்து ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் புகாரை பெற்று சதீஷ் மீது கடத்தல், ஆபாசமாக திட்டுதல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ளசதீஷை வலை வீசி தேடி வருவதாக ஆரணி டவுன் போலீசார் தெரிவித்தனர்.
அரசியல் செல்வாக்கு பெற்றவரின் மகன் என்பதால் அவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண் துடைப்புக்கு வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளதாக உள்ளூர் எதிர்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

