தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி தகவல்!
திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலை மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான முதுகு வலி காரணமாக நீண்ட நேரம் நிற்கவோ, தீவிர பிரசாரம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு, சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். அண்மையில் திருச்செந்தூரில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு தெளிவாக வெளிப்பட்டது.
தொண்டர்கள் ‘அனிதா அம்மாவை லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்’ என பேசியபோது, அவர் ‘அப்படியெல்லாம் பேச வேண்டாம்’ என தடுத்தார். இறுதியாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும், அவரை வெற்றி பெற வைப்பது அனைவரின் பொறுப்பு’ என தெளிவாக கூறினார். இதன்மூலம் தான் போட்டியிட மாட்டேன் என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருச்செந்தூர் தொகுதி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிக முக்கியமான தொகுதி. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆறு தேர்தல் வெற்றிகள் அந்த தொகுதியை கோட்டையாக மாற்றியுள்ளன.
அவர் விலகினால் அங்கு வலுவான வேட்பாளர் தேவை என்பதால், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கனிமொழி தென் மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்டவர். அவரது வருகை திருச்செந்தூர் தொகுதியில் திமுகவுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த முடிவு திமுகவுக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் அவரை தொடர்ந்து களத்தில் வைக்க வேண்டும் என விரும்பினாலும், அவரது உடல்நிலை மற்றும் சட்டரீதியான சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர் எடுத்த முடிவு மரியாதைக்குரியது. கனிமொழி போட்டியிடுவது உறுதியானால், திருச்செந்தூர் தொகுதி 2026 தேர்தலில் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் தொகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது….


