அணைக்கரை கீழணையில் சர். ஆர்தர் காட்டனுக்கு முழு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
அணைக்கரை கீழணையில் இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என போற்றப்படும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டனுக்கு முழு உருவ வெண்கல சிலை மற்றும் நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வலியுறுத்தினார்.
சர். ஆர்தர் காட்டனின் 223-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை காலை அணைக்கரை கீழணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜி. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர். ரவி வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே. உலகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம், இயற்கை உழவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சர். ஆர்தர் காட்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சிறப்புரையாற்றிய மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கூறியதாவது:
“1803 ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்த சர். ஆர்தர் காட்டன், இந்தியாவில் நீர்ப்பாசன வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். 1829-ஆம் ஆண்டு காவிரி பாசனப் பகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், கரிகால சோழன் கட்டிய கல்லணையின் பெருமையை உலகறியச் செய்தார்.
கொள்ளிடம் பகுதியில் நீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுக்க 1835-36 காலகட்டத்தில் மேலணை கட்டப்பட்டது. இதன் மூலம் தஞ்சை டெல்டா பகுதிகளில் பாசன வசதி மேம்படுத்தப்பட்டதுடன், வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்வழி அமைப்புகளும் சீரமைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் அவர் அமைத்த அணையின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைநிலங்களாக மாறின. அங்கு அவருக்கு பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் தமிழக டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட அவருக்கு அணைக்கரை கீழணையில் முழு உருவ வெண்கல சிலை மற்றும் அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.
மேலும், சர். ஆர்தர் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவும், கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அவரது பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் எஸ். குணாளன் நன்றி கூறினார்.
நிருபர் அ.மகேஷ்

