கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக கும்பகோணம் ஒன்றியம் சார்பில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோழபுரம் பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஜூன் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கே. பாரதி மோகன், மற்றும் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் க. அறிவழகன், ஆகியோர் தலைமை தாங்கினர்.
கும்பகோணம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் அழகு த. சின்னையன் மற்றும் கும்பகோணம் மாநகர கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம. ராமநாதன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான ஏ.வி.கே. அசோக்குமார் கண்டன விளக்க உரையாற்றினார். அப்போது, தேர்தல் வாக்குறுதியின்படி சிறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் பல விவசாயக் கடன்கள் வாராக்கடன்களாக மாறும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்தார். மேலும், உரங்களின் விலை உயர்வு விவசாயிகளை கடுமையாக பாதித்து வருவதாகவும், காவிரி பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5,000 நிவாரணம் போதுமானதல்ல என்றும், விவசாயிகளின் உண்மை நிலையை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் “மண்ணில் பயிரிட்டு தண்ணீர் இல்லாமல் கண்ணீர் சிந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்”, “பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது”, “புயல் மற்றும் சூறாவளி பாதிப்புகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்” எனக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதேபோல், “கோட்டு போட்ட முதல்வரே, ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றாதே” உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பி அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழபுரம் பேரூர் கழக செயலாளர் எம்.இசட். அசாத் அலி செய்திருந்தார். இறுதியாக எஸ். சங்கர் நன்றி உரை வழங்கினார்.
செய்தியாளர்: அ.மகேஷ்


