கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மூத்த தொழில்நுட்பப் பணியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூத்த தொழில்நுட்பப் பணியாளரும், சிஐடியு தஞ்சை மண்டல வலைதளப் பொறுப்பாளர், கும்பகோணம் மண்டல துணைத் தலைவர் மற்றும் சிபிஐ(எம்) போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளருமான சா. செங்குட்டுவன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா திங்கள்கிழமை தாராசுரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி கவிதை நூல் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டு வேலை பழகுநராக பணியில் சேர்ந்த சா. செங்குட்டுவன், 1989-ஆம் ஆண்டு நிரந்தரப் பணியில் இணைந்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், சென்னை அண்ணாநகர் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் 40 ஆண்டுகள் பணியாற்றி 2026 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். தாராசுரம் மாதவன் சீதையம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சம்மேளன துணைத் தலைவர் மா. கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் து. கோவிந்தராஜு வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கும்பகோணம் மாநகரச் செயலாளர் கே. செந்தில்குமார், கும்பகோணம் பணிமனைத் தலைவர் எஸ். சாமிநாதன், தஞ்சாவூர் பணிமனைத் தலைவர் டி. பரத்ராஜன், மத்திய சங்க துணைத் தலைவர்கள் பி. வெங்கடேசன், ஆர். சரவணன், எஸ். ஆரோக்கியராஜ், சம்மேளனப் பொறுப்பாளர் கே. ஆறுமுக நயினார், சிபிஐ(எம்) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சென்னை பாண்டியன் மற்றும் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி. ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய சா. செங்குட்டுவன், தனது 40 ஆண்டு கால பணிப்பயண அனுபவங்களையும், தொழிலாளர் உரிமைப் போராட்டங்களில் பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவரது கவிதை நூல் மற்றும் இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நிறைவில் ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி ஊழியர் சா. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
செய்தியாளர் அ.மகேஷ்


