கும்பகோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விளையாட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தின் 38-ஆம் ஆண்டு கரக மஹோற்சவ திருவிழா, கணபதி ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை பக்தி பரவசத்துடன் தொடங்கியதுஇதையொட்டி நடைபெற்ற கணபதி ஹோமத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு விளையாட்டு முத்து மாரியம்மன் அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் பொரி, அவல், கடலை பழங்கள் உள்ளிட்ட படையல் சமர்ப்பிக்கப்பட்டு, தீப–தூப ஆராதனை நடைபெற்றது.திருவிழாவில் பால்குடம் எடுப்பவர்கள், சக்தி கரகம் சுமப்பவர்கள், வேல் ஏந்தும் பக்தர்கள் உள்ளிட்டோர் ஆலய மரபுப்படி காப்பு அணிந்து விரதத்தைத் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.வரும் ஆக. 14-ஆம் தேதி ஆடி 29 மாலை அம்மன் முளைப்பாரியுடன் உற்சவ வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து ஆக. 16-ஆம் தேதி ஆடி 31 விடையாற்றி விழா மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியுடன் 38-ஆம் ஆண்டு கரக மஹோற்சவ திருவிழா நிறைவடைகிறது.இதற்கான ஏற்பாடுகளை என்.வி.ரமேஷ் ராவ்,மாலதி பாய் குடும்பத்தினர் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவிழாக் குழுவினர் செய்து வருகின்றனர். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனின் அருளைப் பெறுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.செய்தியாளர் அ.மகேஷ்

