தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மாதாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை தலைமையில், வருவாய் கோட்ட அலுவலக மகாமக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்பினர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், “வி.பி-ஜி ராம்ஜி” திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.முன்னதாக விவசாயிகள் சங்கத்தினர் சிகப்பு நிற அகில இந்திய கிசான் சபா கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தியவாறு, தோளில் மண்வெட்டியுடன் மற்றும் கோரிக்கை மனுக்களை கூடைகளில் சுமந்தபடி ஊர்வலமாக கூட்ட அரங்கிற்கு வந்தனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு அதிகாரிகளை அணுகி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அப்போது அவர்கள் பேசுகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் தற்போது விவசாயிகளை ஏமாற்றும் நிகழ்வாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினர். மாதந்தோறும் விவசாயிகள் அளிக்கும் மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு எந்தவித தீர்வும் வழங்காமல் நாடகம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். பலமுறை மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சில அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களையே ஆட்டி வைப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும், விவசாயிகள் தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமர் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலையிடம் மனு வழங்கப்பட்டது.மனுவில், கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை புதிய “வி.பி-ஜி ராம்ஜி” திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் அதிகாரங்களை மத்திய அரசு மையப்படுத்துவது ஊரகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “வி.பி-ஜி ராம்ஜி” திட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துதல் மற்றும் தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றிருந்தன.இதனுடன், கும்பகோணம் கோட்ட அளவில் 53 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு உள்ளதால் தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிக்க இடமின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதோடு, எடை இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக அறவைக்கு அனுப்பவோ அல்லது புதிய சேமிப்பு கிடங்குகளை அமைத்தோ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், மேகதாது அணை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்த தீர்மானம் தேவையில்லை என்றும், அந்த தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான 270 டிஎம்சி தண்ணீரில் தற்போது 102.75 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்ட அவர்கள், அந்த பற்றாக்குறையை ஈடு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.அதேபோல், ஆடுதுறையில் விவசாயக் கல்லூரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.பாபநாசம் வட்டம் மெலட்டூர் இரண்டாம்சேத்தி மற்றும் மூன்றாம் சேத்தி பகுதிகளில் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும், அந்த பகுதிகளை வேளாண்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த மனுவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர்ராஜன் தலைமையில் சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் திருமலையிடம் வழங்கினர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு, நெல் கொள்முதல், மேகதாது, நீர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்
Related Posts
Add A Comment

