அம்பாள் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் குமரன் தெரு காடுவெட்டி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் திருக்கோவிலின் 161வது ஆண்டு மகோத்சவ விழா நடப்பு ஆண்டு ஆனி மாதத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 19ஆம் தேதி கொடியேற்று விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் தினமும் ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திருவீதி உலா வருகிறார். அதன்படி புதன்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் அருள்மிகு ஆதி சாந்தகுண மாரியம்மன் பல்வேறு வண்ணமலர் அலங்காரத்துடன் மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து ஆலய அர்ச்சகர் மகாதீபாரதனை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பின், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட அம்பாள், குமரன் தெரு, திருஞானசம்பந்தர் நகர், சத்தியம் நகர், அம்மன் காலனி, பிரம்மன் கோவில் மற்றும் அரசலாறு சாலை வழியாக முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள், தெருவாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

