நீட் தேர்வுக்கு தடைவிதிக்க கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக, கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கும்பகோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர். மாதாமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகவும், அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்பை குறைப்பதாகவும் கூறி, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி கண்டன உரையாற்றினார். மேலும் போராட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பி. சரண்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநகரச் செயலாளர் ஏ. முகமது ஜாபீர், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டப் பொருளாளர் எம். ராஜலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர். பழனி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநகர துணைச் செயலாளர் ஆர். சக்திவேல், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். வீரமணி, எம். ருத்ரேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.இதில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

