மாம்பழ மண்டலமாக அறிவிக்கவும், மாங்காய்க்கு ஆதார விலை வழங்கவும் வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்காய்களை உடைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம், கிருஷ்ணாபுரம், அழகாபுதூர், மலையப்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து, மாமரங்களையே வெட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.எனவே, கும்பகோணத்தை மாம்பழ மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், மேலும் மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால், அவற்றை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கும் அரவை ஆலைகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அத்துடன், ஏரி, குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், பாபநாசம் வட்டம் 91 புத்தூர் கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட வடவாறு பிரிவின் பொதுப்பணித்துறை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் சேதமடைகின்றன. எனவே, அந்த வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்காய்களை உடைத்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் பி.எம். காதர்உசேன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், குரு. சிவா, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் க. சுந்தரராஜன், மாவட்ட நிர்வாகிகள் வே. முரளி, ஆர். பழனி, எம். வீரமணி, ஆர். ஆரோக்கியதாஸ், சி. சின்னதுரை, ஆர். பிரவீன்ராஜ், எஸ். விக்னேஸ்வரன், ஏ. சகாதேவன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.செய்தியாளர் அ.மகேஷ்

