நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் வரவேற்றார். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவதை குறித்து தெரிந்திருக்க வேண்டும். விபத்தில் காயம் அடைந்தவர்கள், வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.தீயை அணைப்பது, காயம் பட்டவர்களை தூக்கி செல்வது குறித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. உயர்ந்த கட்டிடங்களில் மீட்பு பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஹாரிஸ் தாமஸ் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். விழிப்புணர்வு முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பிற வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஓவியக் கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர்,தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், கணித ஆசிரியர் ஜெயக்குமார் டேவிட், நாட்டு நலப்பணித்திட்ட உதவி அலுவலர் ரீபைனர் மேஷாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
