பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7- வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். அங்கு, பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்று வருகிறார்.
வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். வாகன பேரணியில் பங்கேற்று வரும் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜனதா வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


