இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் மீது பழிவாங்கும் போக்குடன் சிறைத்துறை அதிகாரிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விசாரணை கைதிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
புழல் சிறையில் உள்ள கேண்டினில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்ததற்காக, சிறைத்துறை அதிகாரிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்து, நேர்காணும் மனு வாய்ப்பை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
ஏற்கனவே, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விஷயத்தில் இந்த அரசு கண்டு காணாதும் இருக்கும் நிலையில், பல்லாண்டுகளாக அவர்கள் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், தற்போது முஸ்லிம் விசாரணை கைதிகள் மீது அவ்வப்போது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள் முஸ்லிம் சிறைக் கைதிகளின் பாதுகாப்பை சிறைக்குள்ளேயே கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆகவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு விசாரணை கைதிகள் மீது கொடுந்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் சிறையில் நடப்பதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


