பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து, பின்னர் ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட திருச்சியைச் சேர்ந்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த விஜய், அந்த பெண்ணுடன் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்ந்த பின்னர், திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்பட்டு ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு
பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருச்சியை சேர்ந்த விஜய் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த மனுவைப் பெற்றுக் கொண்டு புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்காமல் அனைத்து மகளிர் காவல் துறை அலட்சியம் காட்டியதுடன், குற்றம் சாட்டிய நபரை தலை மறைவு செய்ய வைத்து பின்னர் ஆலோசனை வழங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மூலம் முன்ஜாமின் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையை நம்பி பிரயோஜனம் இல்லை எனக்கருதி உரிய நியாயம் வேண்டி தனது உறவினர்கள் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பின்னர் நடந்த விவரத்தை எடுத்துரைத்து மனு தாக்கல் செய்து ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 29/2025 வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை CRL MP (MD) No.13917 of 2025 in CRL OP (MD) No.13068 of 2025 வழக்கில் கடந்த ஜூன் 9ஆம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி குற்றஞ்சாட்டப்பட்ட விஜயை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்காமல் காலதாமதம் ஏற்படும் சூழலில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஜூன் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பா.சரண்யா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.தாமரைச்செல்வி பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும், பாலியல் அத்துமீறல்களையும் விளக்கி உரையாற்றியதுடன், பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.பிரியா, துணைத் தலைவர்கள் கே.கலைச்செல்வி, ஜெ.சந்திரா, மாவட்ட பொருளாளர் எம்.ராஜலட்சுமி உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், குற்றவாளி விஜயை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் விஜய் என்ற நபரை கைது செய்யாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் காட்டுவதாகவும், வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி காவல்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநகர செயலாளர் எம்.கவிதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட மாதர் தேசிய சம்மேளனம் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்


