தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வருகை தந்தார்.
பின்னர் இன்று காலை தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி செ.அமிர்தராஜ், மேயர் பெ.ஜெகன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலாளர் மு.பிரதாப், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அ.பிரம்மசக்தி, துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


