10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று ஒரே ஒரு போட்டி நடைபெற உள்ளன. இதில், இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3ல் வெற்றி, 9ல் தோல்வி என தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அதிரடியாக தொடரைத் தொடங்கியது. அதன்பிறகு, 7 தொடர் தோல்விகளைச் சந்தித்தது.
இதன்பின்னர் உ.பி. யோத்தாஸ் அணிக்கு எதிராக 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றது. இதனால், அணி இனிமேல் வெற்றிப் பாதையில் பயணிக்கும் என கருதினார்கள். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றது. எனவே, புள்ளிகள் பட்டியலில் நல்ல இடத்தில் முடிக்க அவர்கள் இன்றையப் போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள்.

