தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகளை பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீது ஃப்ரோஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. பல பகுதிகளில் அதிக வெப்பநிலையும், சில பகுதிகளில் கனமழையும் நீடிக்கின்றன. இத்தகைய சீதோஷ்ண நிலைகளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது அவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், கனமழை காரணமாக பயணத்தில் ஏற்படும் சிரமங்கள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
மேலும், இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பண்டிகையான பக்ரீத் ஜூன் 7 அன்று கொண்டாடப்படவுள்ளது. பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்பட்டால், கோடை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக மீண்டும் பயணிக்க வேண்டிய நிலை உருவாகும். இது குடும்பங்களுக்கு கூடுதல் பயணச் செலவு மற்றும் நேர இழப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், வெளியூரில் உள்ள ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஆகவே, இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi

