அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு காரணமாக நிலோபர் கபில் கட்சி தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஆனால், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கட்சி தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.
தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவர் திமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் தி.மு.க வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி ஆளும் திமுகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

